சென்னையைச் சேர்ந்த 35 வயதான சதீஷ்குமார் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரால் நடக்க முடியாது. என்றாலும் அவர் சோர்ந்துவிடவில்லை. முடக்குவாதம் அவரை முடக்கிவிடவில்லை. ஆர்வத்தை அடக்கிடும் தடையேது? அதனால் பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற தனது ஆர்வத்தை செயல்படுத்தி வருகிறார்.
அதிலும் கூட வித்தியாசமாக ஸ்கூபா டைவிங், பாராஷூட்டில் பறப்பது, ராம்ப் வாக், கிரேனில் தொங்கியபடி நடனமாடுவது என்று பல விஷயங்களிலும் ஈடுபடுகிறார். வாழ்க்கையின் அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களிலும் சதீஷ்குமார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார். மேலும், மாறுத்திறனாளிகளால் பயன்படுத்தக்கூடிய வகையில் பொது போக்குவரத்துச் சேவைகள் இருக்க வேண்டும் என்பதற்காக தாம் முயன்று வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.